Friday, 22 February 2019

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 58 புலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்!:

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 58 புலிகளில் காற்றுப்போன தளபதிகளிற்கு வழங்கப்பட்ட தண்டனைகள்!:

யாழ்ப்பாணத்திற்குள் இனி புலிகள் ஒரு அடியும் முன்னகர கூடாதென இந்தியா கறாரான நிலைப்பாட்டையெடுத்தது. மேலதிகமாக இன்னொரு செய்தியையும் சொன்னது. இலங்கைக்கும் அழுத்தம் கொடுக்கிறோம். பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனையை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே அந்த தகவல்.
1991 இல் ராஜீவ்காந்தி கொலையை தொடர்ந்து இந்தியா- புலிகள் உறவு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. புலிகளை கவிழ்ப்பதற்கு சமயம் பார்த்துக் கொண்டிருந்தது இந்தியா. இது புலிகளிற்கும் தெரியும். ஆனால் இந்தியாவின் விருப்பங்கள், முயற்சிகளை கடந்து புலிகள் உலகத்திலேயே பலமான இயக்கமாக உருவெடுத்திருந்தனர். புலிகளின் வளர்ச்சி இந்தியாவிற்கு விருப்பமானதாக இல்லை. ஆனால் தவிர்க்க முடியாமல் மூன்றாம் நபர்களினூடாக உறவை வைத்திருந்தது.
இப்படியான சமயத்தில்தான் புலிகள் யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்வதை இந்தியா தடுத்தது. இந்தியாவிற்கு தெரியும், புலிகளின் நகர்வை தடுத்தால் இரண்டு தரப்பும் இன்னும் எதிர்நிலைக்கே செல்வோம் என்பது. அடுத்தது, பிரபாகரனை மிரட்டி பணிய வைக்க முடியாதென்பதை இந்தியாவிற்கு காலம் நன்றாகவே புரிய வைத்திருந்தது.
1987 இல் இந்திய- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் புலிகளின் சம்மதத்தையும் இந்தியா பெற விரும்பியது. இந்த சமயத்தில் இந்தியாவின் நடத்தை எஜமானைப் போலிருந்தது. இலங்கை அரசு இதை சகித்து கொண்டது. ஆனால் புலிகள் அதை சகிக்கவில்லை. பிரபாகரனை விருந்தினர் போல அசோகா ஹோட்டலிற்கு அழைத்து சென்று, தடுத்து வைத்து மிரட்டல் பாணியில் அழுத்தம் கொடுத்தபோதும் பிரபாகரன் அதை ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து திரும்பி யாழ்ப்பாணம் சுதுமலையில் பிரபாகரன் பேசியபோது இதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அதை நாங்கள் ஏற்கவில்லையென்பதை தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார்.
புலிகளின் இந்த மனப்போக்கு தெரிந்துதான் இந்தியா தீர்வு பற்றி பேசியது. இந்தியாவின் விருப்பத்தையும் சொல்லியதாயிற்று, புலிகளையும் சமாளித்தாயிற்று என இந்தியா நினைத்தது. இந்த சமயத்தில் புலிகள் வலிந்த தாக்குதல்களை நிறுத்தி, கைப்பற்றிய பிரதேசங்களை தக்க வைப்பதென முடிவு செய்தனர். புலிகளின் தொடர் தாக்குதல்களால் இராணுவம் நிலைகுலைந்து போயிருந்தது. இராணுவத்தை சுதாகரிக்க அவகாசமே கொடுக்காத அதிரடித் தாக்குதலைத்தான் புலிகள் செய்தார்கள். நிலைகுலைந்து போயிருந்த கட்டுமானத்தை சரி செய்ய ஒருசில நாள் அவகாசம் கிடைத்தாலாவது பரவாயில்லையென இராணுவம் இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த சமயம் அது. புலிகளின் தாக்குதல் நிறுத்தப்பட்டது இராணுவத்திற்கு வாய்ப்பாக அமைந்து விட்டது.
ஜனக பெரேரா, சரத் பொன்சேகா இருவரும் பலாலியில் இருந்து இராணுவத்தை மீள ஒருங்கிணைத்தார்கள். களத்தில் அடி வாங்கிய இராணுவத்திற்கு ஓய்வுகொடுத்து, யாழ்ப்பாணத்தின் மற்ற பகுதிகளில் இருந்த இராணுவத்தை முன்னணிக்கு நகர்த்தினார்கள். அவர்களின் மூலம் புலிகள் மீது தாக்குதலை ஆரம்பித்தனர்.
செம்மணி வளைவு, அரியாலை பகுதிகளை இரண்டு, மூன்று நாட்களிலேயே புலிகள் கைவிட வேண்டியதாகிவிட்டது. அங்கு சிறியளவிலான புலிகளின் அணியே நிலைகொண்டிருந்தது. இவையெல்லாவற்றையும் விட, 1999 இறுதியில் ஆரம்பித்த புலிகளின் வலிந்த தாக்குதல் இது. பல மாதங்களாக நடந்தது. புலிகளும் கடுமையான ஆளணி பற்றாக்குறையை சந்தித்தனர். புலிகளின் மருத்துவமனைகள் காயமடைந்த போராளிகளால் நிரம்பி வழிந்தன. களத்தைவிட்டு அகற்றப்பட்டவர்களின் இடத்தை நிரப்ப ஆட்கள் கிடைக்கவில்லை.
தொடர் சண்டையால் புலிகளின் படையணிகளும் களைப்படைந்து விட்டன. வெற்றி உற்சாகம் என்பது வேறு, இழப்புக்கள், களைப்பால் ஏற்படும் வெற்றிடம் என்பது வேறு. முன்னேறி செல்லும் அணிகளை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றி, அணிகளிற்கு ஓய்வு கொடுப்பதை ஆரம்பத்தில் புலிகள் செய்தனர். பின்னர் மரணம், காயம் அதிகரித்து செல்ல மாற்று அணிகள் இல்லாமல் போய்விட்டன.
ஆகவே அரியாலை, செம்மணி உள்ளிட்ட பகுதிகளை கைவிட புலிகள் முடிவு செய்தனர். ஆனால் சாவகச்சேரி, தனங்கிளப்பு, மட்டுவில், கனகம்புளியடி சந்தி பகுதிகளை கைவிடும் எண்ணம் புலிகளிடம் இருக்கவில்லை. அந்த பகுதிகளை உள்ளடக்கியதாக நிலைகொள்வோம், பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில்- அந்த இடத்தில் இருந்தபடி, யாழ்ப்பாணத்தின் எஞ்சிய பகுதிகளை கவனிப்போம் என புலிகள் நினைத்தனர். யாழ் களமுனை, தளபதி சொர்ணத்திடம் கையளிக்கப்பட்டது.
ஆனால் அந்த களம் புலிகளிற்கு பெரும் சோதனைக்களமானது. பெட்டியடித்தல் (BOX) முறையை பயன்படுத்திதான் யாழ்ப்பாண களமுனையின் வாசலை புலிகள் திறந்தார்கள். ஆனையிறவிற்கு பின்னால் குடாரப்பில் 2000.03.26 அன்று பால்ராஜ் தலைமையிலான அணியினர் தரையிறங்கி இத்தாவிலில் பெட்டியடித்ததே ஆனையிறவின் வீழ்ச்சிக்கு காரணம். அந்த உத்தியை தென்மராட்சி களமுனையில் இராணுவம் பயன்படுத்த ஆரம்பித்தது.
புலிகளின் அணிகளை கூறாக்கி, அடிக்கடி சிறிய சிறிய பெட்டிகள் அடித்தார்கள். அதற்குள் சிக்கும் புலிகளின் அணிகள் அழிவை சந்தித்தன. அடிக்கடி நடந்த பெட்டியடிப்பில் நூற்றுக்கணக்கில் புலிகள் மரணிக்க தொடங்கினார்கள். அத்துடன் கைப்பற்றப்பட்ட இடங்களும் பறிபோக ஆரம்பித்தன.
80களின் தொடக்கத்தில் பிரபாகரனின் நம்பிக்கையான மெய்ப்பாதுகாவலராக சொர்ணம்
இராணுவத்தின் பெட்டியடிப்பு தந்திரோபாயத்தை எதிர்கொள்ள சொர்ணத்தால் முடியவில்லையென்பதே உண்மை. இராணுவத்தின் தந்திரோபாயத்திற்கு சவாலளிக்கத்தக்க எந்தவொரு உத்தியையும் புலிகள் அப்போது வெளிப்படுத்தவில்லை. இது சொர்ணத்தின் பலவீனம்.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வாரமும் இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தியது. அதாவது, முன்னர் புலிகள் செய்ததைபோல. புலிகளிற்கு அவகாசம் வழங்காமல் தொடர்ச்சியாக தாக்குவதென்ற இராணுவத்தின் உத்தி பலித்தது. சொர்ணத்தின் திட்டமிடல் குறைப்பாடும் இராணுவத்திற்கு சாதகமாகியது.
சொர்ணம் சற்று சுதாகரித்து தனது பாணியில் சில நகர்வுகளை செய்ய எத்தனித்த சமயத்தில் காலம் கடந்துவிட்டது. ஏற்கனவே ஆளணி பிரச்சனையால் திண்டாடிய புலிகள், அண்மைய இராணுவ நடவடிக்கையால் ஏற்பட்ட கணிசமான இழப்புக்களால் எதுவும் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.
சாவகச்சேரியை எப்படியாவது காப்பாற்றிவிட புலிகள் முயற்சித்தனர். அப்போது கனகம்புளியடி சந்திக்கு அப்பால் களமுனையிருந்தது. கனகம்புளியடி சந்தி ஒரு கேந்திர நிலையமாக இருந்தது. கனகம்புளியடி சந்தியை இராணுவம் கைப்பற்ற வாய்ப்பாக அமைந்தது- புலிகளின் ஆளணி பிரச்சனை. அந்த பகுதியில் அணிகளை நிறுத்த அவர்களிடம் ஆளணி இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி இராணுவம் சாவகச்சேரிக்குள் நுழைந்தது.
சாவகச்சேரி, தனங்கிளப்பு உள்ளிட்ட பகுதிகளில் இராணுவம் தொடர்ச்சியாக பெட்டியடித்து புலிகளிற்கு பேரிழப்பை ஏற்படுத்தியது. தென்மராட்சியில் நிலைகொண்டிருப்பது பெரும் உயிர்விலை கொடுப்பதிலேயே முடியும் என்பதை உணர்ந்த பிரபாகரன் தென்மராட்சியை விட்டு பின்வாங்க முடிவெடுத்தார்.
தொடர் தாக்குதல்களால் புலிகளின் அணிகள் தென்மராட்சியை விட்டு பின்னகர்ந்து முகமாலையில் நிலை கொண்டன. சொர்ணம் உடனடியாக திருப்பி அழைக்கப்பட்டார். தீபன் அந்த களமுனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
சொர்ணத்தின் செயற்பாட்டில் பிரபாகரன் பயங்கர அதிருப்தியில் இருந்தார். தரைத்தாக்குதல்களில் அவர் லாயக்கற்றவர் என்ற உணர்வை ஏற்படுத்தவோ என்னவோ அவரை கடற்புலிகள் அணிக்கு அனுப்பினார். அப்போது கடற்புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்தவர் கங்கைஅமரன். அவரது பொறுப்பிற்கே சொர்ணம் அனுப்பப்பட்டார்.
தரைத்தாக்குதலில் பெரும் தளபதியாக விளங்கியவரை கடற்புலிகளின் மாவட்ட தளபதியாக அனுப்பி தண்டனை வழங்கினார் பிரபாகரன். இந்தபாணி தண்டனை வழங்கலை பிரபாகரன் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தார். தாக்குதலில் சிறப்பாக செயற்படாத தளபதியை பதவி இறக்கி சாதாரண போர்வீரராக களத்திற்கு செல்ல பணிப்பார். மீண்டும் சண்டைமுறையை பயின்று கொள்ளுங்கள் என்பதே இதன் அர்த்தம்.
மணலாறு மாவட்ட சிறப்பு தளபதியாக இருந்தவர் வெள்ளை. பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்து வளர்ந்தவர். நல்ல நிர்வாக ஆற்றல் மிகுந்தவர். 1990ஆம் ஆண்டு முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதலிலும் முக்கிய பங்கு வகித்தவர்.
மண்கிண்டிமலை முகாம் மீது 1995 இல் புலிகள் நடத்திய தாக்குதல் தோல்வியடைய, அதற்கு தண்டனையாக வெள்ளை பதவி இறக்கப்பட்டார். இறுதியில் சூரியகதிர் நடவடிக்கையில் புத்தூரில் 150 பேர் கொண்ட கொம்பனி லீடராக செயற்பட்டு மரணமானார். அவர் லெப்.கேணல் தரமுடையவர். ஆனால் இறப்பின்போது மேஜர் தரநிலையே வழங்கப்பட்டது.
அதுபோல மணலாறு சிறப்பு தளபதியாக இருந்த இன்னொருவர் அன்ரன். 1996 இல் ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில் அளம்பிலில், திரிவிடபஹர என்ற படைநடவடிக்கையை மேற்கொண்டு தரையிறங்கிய இராணுவத்தை புலிகள் சுற்றிவளைத்தனர். அந்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்தவர் அன்ரன்.
தரையிறங்கி இராணுவம், கடற்கரையோர பற்றைகளில் நல்ல மறைப்பில் பதுங்கியிருந்தனர். பழைய அரசர் கால யுத்தங்களை போல, “ம்… அவர்களை தாக்குங்கள்“ என அரசர் உத்தரவிட்டு, எதிரிப்படைகளை நோக்கி பாய்ந்து செல்வதை போல, அன்ரன் தாக்குதல் செய்தார். இளநிலை தளபதிகள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், வெட்டவெளிக்குள்ளால், காலை 9 மணிக்கு இராணுவத்தை நோக்கி முன்னேறும்படி கட்டளையிட்டார்.
பதுங்கியிருந்த இராணுவம், வெட்டவெளியால் வந்த போராளிகளை குருவி சுடுவதை போல சுட்டு விழுத்தியது. பெரும் இழப்பு. அன்ரனிற்கு அடுத்த பொறுப்பில் இருந்தவர், இம்ரான் பாண்டியன் படையணி தளபதி ராஜேஷ். அன்ரனின் நகர்வுகளை அவரும் எதிர்த்தார். உடனே பொட்டம்மான் அங்கு சென்று களத்தில் நடந்தவற்றை விசாரித்தார். மாலையில் அன்ரனிற்கு காற்று போனது. அன்ரன் பின்னாளில, ஏழுபேர் கொண்ட சாதாரண அணியில், சாதாரண ஒருவராக நியமிக்கப்பட்டார்.
சூசையின் பின்னால் நிற்பவர் ராஜேஷ். (உடனடியாக தெளிவான புகைப்படங்கள் கிடைக்கவில்லை. ராஜேஷின் தெளிவான புகைப்படம் உள்ளவர்கள் அனுப்பி வைக்கலாம்)
அன்ரனின் இடத்திற்கு ராஜேஷ் உயர்ந்தார். ஓயாத அலைகள் 1 முடிய, மணலாறு மாவட்ட தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1997இல் ஆனையிறவு மீதான தாக்குதலில் அணிகள் உள்நுழைந்து ஆட்லறிகளை கைப்பற்றி விட்டன. கைப்பற்றிய ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை. இதனால், ஆனையிறவிற்குள்ளேயே அவற்றை தகர்த்து விட்டு, புலிகள் பின்வாங்கினார்கள்.
தளபதி ராஜேஷின் அணி திட்டமிட்டதை போல, செயற்படாமையே, ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியாமைக்கு காரணம். அவரது அணியின் பொறுப்பு, கொம்படியிலிருந்த இராணுவ முகாமை அழிப்பது. ஆனால் நள்ளிரவில் நகர தொடங்கிய அவரது அணி, குறிப்பிட்ட நேரத்தில் இடத்தை அடையவில்லை. வழிகாட்டிகளும் குழப்பி விட்டனர். விடிகாலையில் அங்கு போய், முகாமை கைப்பற்ற முடியவில்லை. ஆட்லறிகளை வெளியில் கொண்டு வர முடியவில்லை.
இதனால் தாக்குதல் தோல்வியில் முடிந்தது. அதற்கு தண்டனையாக ராஜேஷ், ஏழு பேர் கொண்ட அணியில் ஒருவராக பதவியிறக்கப்பட்டார். பின்னாளில் ஆனந்தபுரம் சமரில் அவர் மரணமானார். கேணல் தர நிலை வழங்கப்பட்டது.
(தொடரும்)




No comments:

Post a Comment