பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் 17 வருட பகை இருந்ததாக குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகள் அமைப்பையே உடைப்பது வரை வளர்ந்து சென்ற அந்த பகையின் பின்னணி என்ன?
விடுதலைப்புலிகள் அமைப்பின் உயர்மட்டத்தில் மட்டுமே அறியப்பட்டிருந்த தகவலொன்றை இப்பொழுது உங்களுடன் பகிரப்போகிறோம். கருணா பிரிவு சமயத்தில், கொஞ்சம் அதிகமாக கோபப்பட்ட சில விசமறிந்தவர்கள் இந்த பிரச்சனையை பற்றி மற்றவர்களுடன் பேசியிருக்கிறார்கள். அதனால், அரசல்புரசலாக கதை வெளியில் வந்திருந்ததையும் குறிப்பிட்டு விடுகிறோம்.
1987 ஒக்ரோபர் மாதம் புலேந்திரன், குமரப்பா உள்ளிட்ட பன்னிரண்டு விடுதலைப்புலிகள் கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டபோது புலேந்திரன் திருகோணமலை மாவட்ட தளபதி. குமரப்பா மட்டக்களப்பு மாவட்ட தளபதி.
இவர்கள் மரணமானதும், தளபதி வெற்றிடம் ஏற்பட்டது. இந்தியப்படைகளுடன் மோதல் ஏற்படும் தறுவாயிலிருந்த நாட்கள் அவை. உடனடியாக திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களை மீள் ஒழுங்கமைக்க வேண்டுமென பிரபாகரன் நினைத்தார். இதற்காக மிக நம்பிக்கையான ஒருவரை அங்கு அனுப்ப விரும்பினார்.

திருகோணமலையில் புலேந்திரனிற்கு அடுத்ததாக சஞ்சய் இருந்தார் (யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் உமைநேசன் என்ற பெயரில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர் அவர்தான்) அவரையே திருகோணமலை மாவட்ட தளபதியாக்கினார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் இருந்தவர் கருணா. பிரபாகரனும், புலிகளின் மையமும் வடக்கில் இருந்ததால் கிழக்கில் புலிகள்- வடக்கைவிட குறைந்தளவான இராணுவ வளர்ச்சியை பெற்றிருந்தனர்.
நினைத்த மாத்திரத்தில் கிழக்கில் உள்ளவர்கள் வடக்கிற்கு வந்துபோகவும் முடியாது. கொஞ்சம் தனித்து, சிறப்பாக இயங்க கூடியவர்கள் கிழக்கிற்கு தளபதியாக இருக்க வேண்டுமென நினைத்த பிரபாகரன், தனது மெய்ப்பாதுகாவலர் அணியிலிருந்த கருணாவை கிழக்கு தளபதியாக நியமிக்க முடிவெடுத்தார். கருணாவை மட்டக்களப்பு தளபதியாக்க வேண்டுமென்று பிரபாகரன் சிலகாலமாக திட்டமிட்டு, அதற்கேற்ப கருணாவை வளர்த்து வந்தார்.
இந்த இடத்தில் இடையீடாக இன்னொரு தகவலையும் குறிப்பிட்டு விட வேண்டும். புலிகள் அமைப்பிற்குள் மாவட்ட தளபதிகளாக நியமிக்கப்பட்டவர்கள் இரண்டு வகையானவர்கள். முதலாவது, நீண்டகாலமாக களங்களில் தொடர்ந்து செயற்பட்டு, களத்தில் இருப்பவர்கள் மத்தியில் திறமையால் முன்னுக்கு வருபவர்கள். சாள்ஸ் அன்ரனி படையணி தளபதிகள் எல்லோரும் இந்தவகையானவர்கள்தான்.
இன்னொரு வகையலும் தளபதிகள் நியமிக்கப்பட்டனர். பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் அணியில் இருப்பவர்கள் நினைத்த மாதிரி யுத்தகளங்களிற்கு செல்ல முடியாது. இரகசிய சிவை தடுப்பதும், அடிக்கடி புதியவர்களை அந்த இடத்தில் நியமிக்க முடியாது என்பதும் காரணங்கள்.
தனது மெய்பாதுகாவலர் அணியிலுள்ள திறமையானவர்களை பிரபாகரன், தருணம் வரும்போது முக்கிய இடங்களில் அமர்த்துவார். கருணாவில்தான் இந்த வழக்கம் ஆரம்பித்தது. அதன்பின் சொர்ணம், கடாபி, ஜெயம் என நீண்டு, 1995 இல் தனது பாதுகாப்பு அணி பொறுப்பாளராக இருந்த குமரனை மிக இள வயதில் மணலாறு தளபதியாக்கினார்.
பின்னர் பாதுகாப்பு அணி தளபதியாக இருக்காவிட்டாலும் ராஜேஷை 1996 இல் மணலாறு தளபதியாக்கினார். 2000 இன் தொடக்கத்தில் வேலவனை இம்ரான் பாண்டியன் படையணிக்கே தளபதியாக்கினார். இதில் குறிப்பிட வேண்டிய விசயம், இந்த நியமனங்கள் எதுவுமே சோடை போகவில்லை!
மட்டக்களப்பிற்கு சென்ற கருணா, அப்போதைய தளபதி குமரப்பாவிற்கு கீழ் செயற்பட்டார்.

குமரப்பாவிற்கு அப்பொழுது திருமணம் திட்டமிடப்பட்டிருந்தது. அவர் யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டால் கருணாவால் மாவட்டத்தை தனியாக நடத்த முடியுமா என்ற கேள்வியும் பிரபாகரனிடம் இருந்தது. ஏனெனில் அவர் அப்பொழுதுதான் புலிகளில் இணைந்து நான்கு வருடமாகியிருந்தது. சிறியவர்.
இதேபோலத்தான் திருகோணமலை நிலவரமும் இருந்தது. புலேந்திரனுக்கு பதிலாக சென்ற சஞ்சயும் புதியவர்.
இருவரும் பெரிய நிர்வாகங்களை தனித்து நடத்திய அனுபவம் இல்லாதவர்கள். அவர்களின் கையில் மாவட்ட பொறுப்பை வழங்காமல், பிரபாகரன் வேறொரு ஐடியா போட்டார்.
அப்போது யாழ்ப்பாண தளபதியாக இருந்த பொட்டம்மானை கிழக்கிற்கு அனுப்பினார். மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள் இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பு பொட்டம்மானுக்கு வழங்கப்பட்டது. அவரின் கீழ் சஞ்சயும், கருணாவும் சிறிதுநாள் செயற்பட்டு அனுபவத்தை பெற்றதும், தனித்து செயற்பட விடலாம் என பிரபாகரன் நினைத்தார்.
பொட்டம்மான் மட்டக்களப்பிற்கு கிளம்பினார்.
இதற்கு பின்னர்தான் மட்டக்களப்புடன் பொட்டம்மானிற்கு தொடர்பு ஏற்பட்டது. பொட்டம்மானின் மனைவி மட்டக்களப்பை சேர்ந்தவர் என்பது பலர் அறியாதது. அது காதல் திருமணம்.
1987 இல் மட்டக்களப்பிற்கு பொட்டம்மான் வந்தபோது, இந்த காதல்கதை ஆரம்பித்தது. விரைவிலேயே அந்த காதல் திருமணத்தில் முடிந்தது. ஆரம்பத்தில் இந்த திருமணத்திற்கு பிரபாகரன் அவ்வளவாக சம்மதிக்கவில்லை.
முதலாவது, இந்தியப்படைகளுடன் கடுமையான மோதல் நடந்து கொண்டிருந்தது. புலிகளும் கணிசமான இழப்பை சந்தித்து கொண்டிருந்தனர். இந்த சமயத்தில் பொட்டம்மான் திருமணம் முடிப்பது நல்லதல்லவென பிரபாகரன் நினைத்தார். பொட்டம்மானிற்கு திருமணம் முடிக்க அனுமதியளித்தால், ஏனையவர்களிற்கும் திருமணம் முடிக்க அனுமதிக்க வேண்டும். இந்தியப்படைக் காலத்தில் ஏற்பட்டிருந்த அசாதாரண நிலையில், அமைப்பின் இறுக்கமான தன்மையிலிருந்து விலக பிரபாகரன் விரும்பவில்லை. ஓரிரண்டு வருடத்தில் இந்தியப்படையின் பிரச்சனையை முடித்து விட்டு, திருமணம் செய்பவர்கள் செய்யலாமென்பது அவரின் நிலைப்பாடு.
பொட்டம்மான் விடாக்கண்டன். அந்த பெண்ணையே திருமணம் செய்வேன், அதுவும் விரைவில் செய்வேன் என ஒற்றைக்காலில் நின்று திருமணத்தை செய்தார். இதனால்தானோ என்னவோ, புலிகளிற்குள் காதல் திருமணங்களிற்கு அதிக ஆதரவாக பொட்டம்மான் இருந்தார். புலனாய்வுத்துறைக்குள்ளும் காதல் பிரச்சனைகள் வரும். அப்போதெல்லாம் சம்பந்தப்பட்ட போராளியை அழைத்து தனது காதல் கதையை சொல்வார். காதலுக்கு தானும் ஆதரவானவன், காதல் திருமணத்தின் முன் அதற்காக சகலவழிகளிலும் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென ஆலோசனை சொல்வார்.
ஆனால், மாலதி படையணி தளபதி விதுஷா நேர்மாறு. காதலென்றாலே அவருக்கு கண்ணில்காட்டக்கூடாது. மாலதி படையணி பெண்போராளிகளில் யாராவது ஆண் போராளிகளிற்கு காதலோ, விருப்பமோ இருந்து, அந்த தகவல் விதுஷாவின் காதிற்கு சென்றால், அடுத்த கணமே இந்த பெண்போராளியை களமுனைக்கு அனுப்பிவிடுவார். இப்படி களமுனையில் மரணமானவர்கள் பலர்.
பொட்டம்மான் மட்டக்களப்பில் தங்கியிருந்தபடி மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மட்டக்களப்பில் செயற்பட்ட கண்ணன் என்ற போராளியுடன் பொட்டம்மானிற்கு நெருக்கம் ஏற்பட்டது. மட்டக்களப்பில் இருந்த புலிகளின் உயர்மட்ட தளபதிகளில் கண்ணனும் ஒருவர்.
இந்த கண்ணனின் நெருங்கிய உறவு- சகோதரிமுறையானவர்தான் பின்னாளில் பொட்டம்மானின் மனைவியானவர்!
கண்ணன் நீண்டகாலமாக மட்டக்களப்பில் செயற்பட்டு கொண்டிருந்தவர். திறமையான சண்டைக்காரர். அதனால் விரைவிலேயே மாவட்டத்தின் முக்கிய ஸ்ரார்களில் ஒருவராகி விட்டார்.
கண்ணனின் திறமைகளில் பொட்டம்மானிற்கு ஈர்ப்பிருந்தது. அவரை தளபதியாக்கலாமென பொட்டம்மான் விரும்பியிருக்கலாம். ஆனால், பிரபாகரனின் தேர்வுக்கு மாறாக எதையும் அவர் கதைத்திருக்கவில்லை. பிரபாகரனால் நியமிக்கப்பட்ட கருணாவும் மட்டக்களப்பிற்கு வந்து செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
ஆனால் கண்ணன் மூலமாகவும் சில விசயங்களை பொட்டம்மான் செய்வார். இந்தி இராணுவம் மீதான சில பதுங்கித்தாக்குதல்களை கண்ணனே தலைமையேற்று நடத்தியிருக்கிறார்.
இது கருணாவிற்கு பிடிக்கவில்லை. ஒரே உறையில் இரண்டு வாளை வைக்கும் வேலையை பொட்டம்மான் செய்கிறார் என்றுதான் கருணா நினைத்தார்.
பொட்டம்மான் மட்டக்களப்பை விட்டு, யாழ்ப்பாணம் வந்த சிறிது நாளிலேயே இந்தியப்படைகளுடனான மோதலில் கண்ணன் மரணமடைந்தார் என்ற அறிவிப்பு மட்டக்களப்பில் இருந்து புலிகளின் தலைமைக்கு போனது.
ஆனால் கண்ணன் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமாகவில்லை!
(தொடரும்)
No comments:
Post a Comment