இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54 சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம் பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 54 சாள்ஸ் அன்ரனிக்கும், பானுவிற்கும் ஏற்பட்ட நெருக்கம்… பெண் போராளிகளின் தலைமுடி வெட்ட விதுஷா எதிர்ப்பு!
இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?
நான்காம் ஈழப்போரின் தொடக்க காலத்திலேயே மாலதி படையணி சிறப்பு தளபதியாக இருந்த பிரிகேடியர் விதுஷா களைத்து விட்டார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இலங்கை இராணுவத்தின் போர் உத்திதான் இதற்கு காரணம்.மேடான பகுதியை நோக்கி தண்ணீர் ஓடும் பாணியில் அமைந்த இராணுவத்தின் போருத்தியை பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஆனால், மன்னார் களமுனையில் இன்னொரு போருத்தியை இராணுவம் பாவித்தது. அப்பொழுது நிலத்தை கைப்பற்றுவது இராணுவத்தின் நோக்கமல்ல. நீண்ட போரை நடத்தி புலிகளின் ஆளணியை சேதமாக்குவதே திட்டம்.புலிகளின் ஆளணி பற்றிய கணக்கு துல்லியமாக இலங்கை பாதுகாப்புத்துறையிடம் இருக்கவில்லை. உண்மையை சொன்னால், வன்னியிலிருந்த மக்கள் தொகை பற்றிய சரியான கணக்கே அரசாங்கத்திற்கு தெரியாது. இந்த குழப்பத்தை புலிகள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். வன்னி சனத்தொகை தெரிந்தால், அதற்கு அளவான உணவுப்பொருட்களைதான் அனுப்பி வைப்பார்கள். ஆளணியை அதிகரித்து காண்பித்து, உணவுப்பொருள்களை தமது பாவனைக்கு புலிகள் பாவித்தார்கள்.புலிகளின் ஆளணி தொடர்பாக இறுதிவரை இராணுவத்திடம் மிகை மதிப்பீடே இருந்தது. அண்ணளவாக 25,000 போராளிகள் இருக்கலாமென கணக்கிட்டார்கள். இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோத்பாய ராஜபக்ச ஆகியோர் அப்பொழுது இந்த தொகையைதான் பகிரங்கமாக சொன்னார்கள்.ஆனால் உண்மையில் புலிகளிடம் அவ்வளவு ஆள் பலம் இருக்கவில்லை. இவ்வளவு ஆட்பலம் இருந்தால், புலிகள் அந்த யுத்தத்தை சுலபமாக வென்றிருப்பார்கள்.புலிகளிடம் மொத்தமாக எத்தனை போராளிகள் இருந்தார்கள் என்பது தெரியுமா?யுத்தத்தின் இறுதியில் தகவல் கிடைத்து, 25,000 என சொன்னதற்காக கோத்தபாய ராஜபக்சவே இப்பொழுது வெட்கப்படுவார். யுத்தத்தின் இறுதி மாதங்களில், அரசியல்துறையினரிடம் பிரபாகரன் சொன்னது என்ன தெரியுமா?“என்னிடம் 25,000 போராளிகளை திரட்டித் தாருங்கள். நான் யுத்தத்தை வென்று தருவேன்“.கிழக்கை முழுமையாக இழந்து, வடக்கில் மட்டும் புலிகள் யுத்தத்தை எதிர்கொள்ள தொடங்கிய சமயத்தில், அவர்களிடம் 5,750- 6,250 வரையான போராளிகள்தான் இருந்தார்கள். நன்கு பயிற்சி பெற்ற போராளிகளின் எண்ணிக்கை இதுதான். கட்டாய ஆட்சேர்ப்பின் போது அதிகபட்சமாக 8,000 பேரை பிடித்து படையில் இணைத்திருந்தனர். இந்த 8,000 என்ற எண்ணிக்கை நிரந்தரமானதல்ல. ஒரு பக்கம் யுத்தத்தில் இவர்கள்தான் அதிகமாக இறந்தார்கள். மறுவளமாக, கட்டாயமாக ஆட்சேர்க்கப்பட்டவர்கள் வீட்டுக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். மீண்டும் அவர்களை புலிகள் பிடித்துவர… ஓட என ஒரு சுற்றுவட்டத்தில் இவர்கள் இருந்தார்கள்.அதிலும், கட்டாயமாக பிடிக்கப்பட்ட பெண்கள் ஓர்மமாக போரிடமாட்டார்கள். மன்னாரில் பெண்புலிகளின் நிலையை BOX அடித்து, இராணுவத்தினர் அவர்களை உயிரோடு தூக்கிச்செல்ல ஆரம்பித்தனர். மன்னாரின் தள்ளாடியில் இருந்து 2007 செப்ரெம்பரில் படை நடவடிக்கையை ஆரம்பித்தபோதும், தள்ளாடிக்கு அடுத்த அடம்பன் நகரத்தை கைப்பற்ற படையினர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு மாதங்கள். யுத்தத்தின் இறுதிக்காலத்தில் புலிகளின் இறுக்கமான கோட்டைக்குள் இராணுவம் முன்னேறிய வேகத்தையும், இதனையும் ஒப்பிட்டு பார்த்தால் விடயத்தை புரிந்து கொள்வீர்கள்.2009 ஜனவரி 01ம் திகதி பரந்தன் சந்திக்கு 58வது டிவிசன் படையினர் வந்தனர். இதே படையணி ஜனவரி 15ம் திகதி தர்மபுரத்தை கைப்பற்றியது. ஜனவரி 28ம் திகதி விசுவமடுவை கைப்பற்றியது. புலிகளின் கோட்டைக்குள் எவ்வளவு விரைவாக முன்னேறியிருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள்.ஆனால் 2007 இல் மன்னாரில் 58வது டிவிசன் படை நடவடிக்கையை ஆரம்பித்த போது, நிலத்தை கைப்பற்றுவது முதலாவது நோக்கமாக இருக்கவில்லை. தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு புலிகளின் ஆளணியை சேதம் செய்வதே நோக்கம். முன்னரணில் இருந்து சிறிதுதூரம் நகர்ந்து, புலிகளின் முன்னரணை BOX அடித்து தாக்குதல் நடத்துவார்கள். பின்னர், பழைய நிலைகளிற்கே திரும்பி விடுவார்கள். பல மாதங்கள் நீடித்த இந்த தாக்குதலில் சுமார் 700 போராளிகள் மரணமானார்கள். அதில் பெரும்பாலானவர்கள் மாலதி படையணி பெண் போராளிகள்.2007 செப்ரெம்பரில் தள்ளாடியில் இருந்து நகர்வை தொடங்கிய 58வது டிவிசன் 2008 மே மாதம் அடம்பன் நகரத்தை கைப்பற்றியது. தள்ளாடியில் இருந்து வெறும் 9 கிலோமீற்றர் தொலைவிலேயே அடம்பன் உள்ளது. 9 கிலோமீற்றரிற்கு 9 மாதம்!இராணுவம் நிலத்தை பிடிக்க முயலவில்லை, தமது ஆளணியை சேதமாக்கவே முனைகிறதென்பதை சிறிது காலத்தின் பின்னரே புலிகள் புரிந்து கொண்டார்கள். அதன் பின்னர்தான் பின்வாங்கும் முடிவை எடுத்தனர்.தொடர்ந்து முன்னரணில் நிற்கும் பெண் போராளிகளும் களைத்திருந்தார்கள். முன்னரண் என்பது ஒரு காவலரண். அடுத்த காவலரணிற்கு செல்வதற்கு இடுப்பளவு ஆழத்தில் வெட்டப்பட்ட நீளமான பதுங்குகுழி பாதை. காவலரணிற்கு பின்னால் வெட்டப்பட்ட பதுங்குகுழிக்குள்தான் வாழ்க்கை. பெண்களிற்கு இயற்கை பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். சுகாதாரமாக இருக்க தண்ணீர் வசதிகள் எல்லாம் தேவை. ஆனால் முன்னரணில் நீண்டகாலம் நிற்கும் பெண் போராளிகளிற்கு இந்த வசதிகள் எல்லாம் கிடையாது. மூன்று நான்கு மாதங்களிற்கு ஒருமுறை அணிகள் மாற்றப்பட்டு ஒரு வாரமளவில் ஓய்வு வழங்கப்படும் வழக்கத்தை புலிகள் முன்னைய யுத்தங்களில் வைத்திருந்தார்கள். ஆனால் நான்காம் ஈழப்போரில் அது சாத்தியமில்லை. காரணம்- அதிக ஆளணி தேவையாக இருந்தது. மன்னாரிலிருந்து 58வது டிவிசன், வவுனியா பாலமோட்டையிலிருந்து 57வது டிவிசன், மண்கிண்டிமலையிலிருந்து 59வது டிவிசன் முன்னேற்றத்தை ஆரம்பித்திருந்தன. முகமாலை-நாகர்கோவில் முன்னரண் நிலையில் 55,53 டிவிசன்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருந்தன.இலங்கை இராணுவம் இப்படி பிரமாண்ட தயாரிப்பில் பல முனை நகர்வை அதற்கு முன்னர் செய்தேயிருக்கவில்லை. இந்த நகர்வுகளை எதிர்கொள்ள அதிகமான போராளிகள் தேவை. அதனால் களமுனை அணிகளையும் மாற்றிவிட போதிய போராளிகள் இருக்கவில்லை. 2006 இல் மன்னாரில் முன்னரணிற்கு சென்ற மாலதி படையணி போராளிகள் காயம் அல்லது மரணம் அடையும்வரை களத்திலேயே நிற்க வேண்டும்.பள்ளமடு, ஆட்காட்டிவெளி களமுனைகள் கடுமையாக இருந்தன. வெட்டைவெளி. பகலில் எழுந்து நடமாடவே முடியாது. உடலில் தண்ணீர்பட வாரக்கணக்கில் செல்லும். இந்த முனையில் கணிசமானவர்கள் புதிய போராளிகள்.நான்காம் ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய சூட்டுவலு எப்படியானதென்பதை சொல்லத் தேவையில்லை. புலிகளை வீழ்த்துவதென்றால் சூட்டுவலுவை அதிகரிக்க வேண்டுமென்ற சாதாரண உத்தியைத்தான் கையாண்டது. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. அதென்ன சூட்டு வலு?இதை புரிய வைக்கிறோம். ஏழு பேர் கொண்ட அணி இருக்கிறதென வைப்போம். ஆளுக்கு 120 ரவையுடன் ஒரு ஏகே துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு இருக்கிறதென வைப்போம். இதே போன்ற இன்னொரு அணியில் ஐந்து பேரிடம் 120 ரவையுடன் ஏகே துப்பாக்கி, இரண்டு பேரிடம் ஆளுக்கு 600 ரவைகளுடன் எல்.எம்.ஜி, கையெறி குண்டுகள் இருந்தால்- இரண்டாவது அணிதான் சூட்டுவலுவில் வலிமையான அணி. இந்த சிம்பிள் உத்தியை இராணுவம் கையிலெடுத்தது.மூன்று பேரை கொண்ட கொமாண்டோ செக்சன் (commando section)- செக்சன் என்பது இராணுவ அணி பிரிவை குறிப்பது. கொமாண்டோ செக்சன், செக்சன், பிளாட்டுன், கொம்பனி, ரெஜிமென்ற் என விரிந்து செல்லும்- ஒவ்வொரு கொமாண்டோ செக்சனிற்கும் ஒவ்வொரு எல்.எம்.ஜி வழங்கப்பட்டது. அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கட்டமைப்பிற்கும் தேவைக்கும் அதிகமான கனரக ஆயுதங்கள் வழங்கப்பட்டது. வான்புலிகளிற்கு எதிராக பயன்படுத்த இந்தியா வழங்கிய Anti Aricraft Artillery ரக கனரக துப்பாக்கிகளையெல்லாம் தரைச்சண்டைக்கும் ஒவ்வொரு பிரதேசத்திலும் தாராளமாக பாவித்தார்கள். இதனால் எதிர்முனையில் இருந்த புலிகள் தலையை தூக்கவே முடியவில்லை.புலிகளின் ஓயாத அலைகள் 1,2,3 வெற்றிகளிற்கு காரணமும் சூட்டுவலுதான். அப்பொழுது 81,120mm மோட்டார்கள், 122,152 mm ஆட்றிகளாலும் புலிகளின் சூட்டுவலு அதிகரித்திருந்தது. அப்பொழுது புலிகள் 12.5,12.7,14.5 mm கனோன்களையெல்லாம் தாராளமாக பாவிக்க ரவை இருந்தது. கப்பல்கள் வர முடியாமல் போக, புலிகளின் சூட்டுவலு தாழ்ந்தது.ஆயுதங்கள் இல்லை, போராளிகள் இல்லை, இருப்பவர்கள் அனுபவமற்ற புதியவர்கள், அவர்களின் இழப்புக்கள் என மாலதி படையணி தளபதி விதுசா மிகவும் மனமுடைந்து போனார். கட்டாயமாக பிடிக்கப்பட்டு களத்திற்கு கொண்டுவரப்படும் பெண்களால் யுத்தத்தை வெல்ல முடியாது, மாறாக இராணுவத்திடம் உயிருடன் பிடிபடுவதே நடக்குமென்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் புலிகளின் உயர்மட்டத்தில் யாரும் விதுசாவின் கருத்தை கணக்கில் எடுக்கவில்லை.விதுசா கறாரான தளபதியாக இருந்தாலும், பெண்களை புரிந்து கொண்டவர். அதனால்தான் கட்டாயமாக பெண்களை களமுனைக்கு கொண்டு வருவதை எதிர்த்தார்.விதுசாவின் மனநிலையையும், புலிகளின் நெருக்கடியையும் புரியவைக்கும் சம்பவமொன்று நடந்தது. 2009 தொடக்கத்தில் தளபதிகளிற்கிடையிலான கூட்டம் நடந்தது. அப்பொழுது பிரபாகரனின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி அதிகாரமுடையவராக மாறிவிட்டார். சாள்ஸ் எப்படி விடுதலைப்புலிகளிற்குள் நுழைந்து, அதிகாரத்திற்கு கொண்டு வரப்பட்டார் என்பதை இந்த தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது வாசகர்களிற்கு நினைவிருக்கலாம். அப்பொழுது குறிப்பிட்ட சம்பவம்தான். இப்பொழுது மீளவும் குறிப்பிடுகிறேன்.இனி புலிகளால் யுத்தத்தை வெல்ல முடியாதென்பது தெரிந்தோ என்னவோ, களமுனையில் இருந்து தப்பியோடும் போராளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. குறிப்பாக புதிதாக சேர்க்கப்படும் பெண் போராளிகள் களத்தில் நிற்க முடியாமல் தப்பியோடுவது அதிகரித்திருந்தது. இதை குறிப்பிட்டு தளபதி பானு பேசினார். அவர்கள் தப்பியோடுவதாலேயே இராணுவம் விரைவாக முன்னேறுகிறது என்றார். அந்த கூட்டம் சாள்ஸ் தமையிலேயே நடந்தது. தளபதி பானுவும், சாள்ஸ் அன்ரனியும் மிக நெருக்கமானவர்கள். சாள்ஸ் அன்ரனி என்ன செய்தாலும், அது நன்றாக இருக்கிறதென பானு பாராட்டுவார்.
புலிகளின் கனோன் ஒன்றுசாள்ஸ் அன்ரனி பிறப்பதற்கு முன்னரே பானு புலிகளில் இருக்கிறார். இருவரும் நெருக்கமான பின்னர் “பானு ஐயா“ என சாள்ஸ் அழைக்க தொடங்கி, சுருக்கமாக “பானுயா“ என ஐ உச்சரிப்பு வராமல், ஒரு செல்லப்பெயரில் அழைப்பார்.பெண் போராளிகள் பற்றிய பானுவின் குற்றச்சாட்டையடுத்து, மகளிர் தளபதிகளான விதுசா, துர்க்காவை குற்றம்சொல்லும் தோரணையில் சாள்ஸ் பேசிக்கொண்டிருந்தார். தப்பியோடுபவர்களை தடுக்க முடியாது என மகளிர் தளபதிகள் சொல்ல, அதை சாள்ஸ் கணக்கில் எடுக்கவில்லை. இந்த எதிரும் புதிருமான பேச்சு நீடிக்க, ஒரு கட்டத்தில் சாள்ஸ் ஒரு அதிரடியான உத்தரவை இட்டார்.“புதிதாக இயக்கத்திற்கு பிடிக்கும் பெண்கள் அனைவருக்கும் மொட்டை அடியுங்கள். அதன்பின்னர் யாரும் தப்பியோட முடியாது“சாள்ஸ் அன்ரனியின் உத்தரவுகள் கொஞ்சம் ஏடாகூடமாகத்தான் இருக்கும். தளபதிகள் மட்டத்திலேயே கொஞ்சம் அப்படி இப்படி அவரை இரகசியமாக நக்கலடிப்பார்கள். மேல்மட்ட போராளிகள் புலிகேசி (இம்சை அரசன் 23ம் புலிகேசி வெளியான சமயத்தில்தான் சாள்ஸ் அன்ரனியும் பொறுப்பான பதவிகளிற்கு வந்தார்) என தமக்குள் சாள்சிற்கு பட்டப்பெயர் வைத்திருந்தனர். ஆகவே, சாள்ஸ் இப்படி உத்தரவிட்டது கூட்டத்தில் இருந்தவர்களிற்கு ஆச்சரியம் அளித்திருக்காது!
சாள்ஸின் உத்தரவை விதுசா ஏற்கவில்லை. அந்த கூட்டத்தில் இருந்த மூத்த தளபதியொருவருடன் பின்னர் பேசும்போது ஒரு விடயத்தை சொன்னார். “வழக்கமாக இப்படியான கூட்டங்களில் தளபதி விதுசா சென்ரிமென்ராக பேசுபவர் கிடையாது. சில சமயங்களில் சின்னச்சின்ன யோசனைகள் சொல்வாரே தவிர, ஒரேயடியாக இப்படி எதிர்க்கமாட்டார். அன்று கடுமையாக எதிர்த்தார். சில சமயங்களில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்தால், அந்தப் பெண்கள்தான் இராணுவத்திடம் சிக்குவார்கள் என நினைத்திருக்கலாம்“ என்றார்.
தளபதி விதுஷாதலைமுடி பெண்களின் வாழ்வில் அத்தியாவசியமானது, மொட்டையடிப்பது பெண்களை உளரீதியிலும் பாதிக்கும் என விதுசா அந்த கூட்டத்தில் கடுமையாக எதிர்த்தார். சோதியா படையணி தளபதி துர்க்காவும் ஓரளவு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் சாள்ஸ் அன்ரனிக்கு ஆதரவாக பானு பேசினார். மொட்டையடித்தால்தான் பெண்கள் ஓடமாட்டார்கள் என்றார். “பானுயாவே சொன்னால் பிறகென்ன… பிடிக்கிற ஆட்களுக்கெல்லாம் ஒட்ட மொட்டையடியுங்கள்“ என சாள்ஸ் அன்ரனி உத்தரவிட்டார்.அன்றைய கூட்டம் முடிய விதுசா அதிருப்தியுடன் எழுந்து சென்றார்.அடுத்ததாக அவர் செய்த காரியம் என்ன தெரியுமா?(தொடரும்)
No comments:
Post a Comment