ஜெயசிக்குறு களமுனையில் 1997ஆம் ஆண்டு நடந்த சம்பவமொன்றை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மாங்குளத்திற்கு அண்மையாக நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணி போராளிகளை மாற்றிவிடும்போது, புலனாய்வுத்துறையின் இரகசிய உறுப்பினர்களை கவனயீனமாக கையாளப்பட்டிருந்தனர், அந்த களமுனைக்கு கருணாதான் பொறுப்பானவர், இதனால் கருணாவிற்கும் பொட்டம்மானிற்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டிருந்ததென்பதை குறிப்பிட்டிருந்தோம்.
அதற்கு முன்னர் ஒரு விசயம். இந்த தொடரின் அடுத்த பகுதி எப்பொழுது வெளியாகுமென பல வாசகர்கள் கேட்டபடியிருக்கிறார்கள். இந்த தொடர் ஆரம்பித்தபோதே அதை குறிப்பிட்டுள்ளோம். வாரத்தில் இரண்டு தினங்கள்- புதன், ஞாயிறுகளில் இந்த தொடர் பதிவேற்றப்படும்.
சரி, விசயத்திற்கு வருகிறோம். பொட்டம்மான்- கருணாவிற்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதற்கு, மாங்குளத்தில் நடந்த அந்த சம்பவம் மட்டுமே காரணமா என்று கேட்டால்… பதில் இல்லையென்பதே!
பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையில் கிட்டத்தட்ட பதினேழு வருடத்திற்கும் அதிகமான உள்மோதல் இருக்கிறது. இப்படி நாம் குறிப்பிடுவது பலரிற்கு அதிர்ச்சியாக இருக்கலாம். இத்தனை நாளாக நாம் இதை அறியாமல் விட்டுவிட்டோமே என்றும் நினைக்கலாம். விடுதலைப்புலிகளிற்குள் உள் மோதலா என்றும் சிலர் நினைக்கலாம்.
விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் தளபதிகளிற்குள் உள்மோதல் வருவது அரிது. அதற்காக அப்படியொரு மோதல் வரவேயில்லையென்று அர்த்தமல்ல. முன்னரும் மோதல் நடந்திருக்கிறது. அதில் பகிரங்கமாக வெளியில் தெரிந்த பெரிய மோதல் மாத்தையா- கிட்டு மோதல். இதைவிட, வேறு தளபதிகளிற்குள் சின்னசின்ன மோதல் அடிக்கடி இடம்பெற்றுக்கொண்டுதானிருந்தது.
1984 இல் கிட்டு யாழ்ப்பாண தளபதியானார். மாத்தையா வன்னித்தளபதி. பொதுவாகவே தமிழ் சமூகத்திற்குள் யாழ்ப்பாண மேலாதிக்க மனோபாவம் இருக்கும். வன்னிக்குள் யாழ் உணவகம், யாழ் கல்விச்சாலை, யாழ் உற்பத்திகள் என்ற பெயரில் பல நிறுவனங்கள் இருக்கும். ஆனால் யாழ்ப்பாணத்திற்குள் வன்னி உணவகம் என்றோ, கிளிநொச்சி பாதணியகம் என்றோ கிடையாது. அரசஅதிகாரிகள் என்றாலும் சம பொறுப்பில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுபவர் வன்னிக்குள் கடமையாற்றுபவர்களை விட அதிக முக்கியத்துவம் பெறுவார்கள். புலிகளிற்குள்ளும் இதுதான் நடந்தது.
கிட்டு விரைவில் புகழ்பெற்றுவிட்டார். கிட்டுவை பிரபாகரனிற்கும் நன்றாக பிடித்தது. அதிகமாக நம்பினார். வெளிநாட்டில் இருந்து இந்தியா வழியாக வரும் ஆயுதங்கள் யாழ்ப்பாணத்திற்குத்தான் வந்துசேர்ந்தது. அப்பொழுது பிரபாகரன் இந்தியாவில் தங்கியிருந்தார். யாழ்ப்பாணத்தை கிட்டு, மன்னாரை விக்டர், வன்னியை மாத்தையா, திருகோணமலையை புலேந்திரன், மட்டக்களப்பை குமரப்பா கவனித்துக் கொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திற்கு வரும் ஆயுதங்கள் முறையாக பகிரப்படுவதில்லையென மாத்தையா நினைத்தார். புலேந்திரனிடமும் இந்த அதிருப்தி இருந்தது. யாழ்ப்பாணத்தில் புலிகள் அதிக நிதி வசூலித்தார்கள். ஆனால் அதில் கணிசமான பணம் யாழ்ப்பாணத்திலேயே புலிகளால் செலவிடப்பட்டது. புலிகளின் நிர்வாக மையம் யாழ்ப்பாணத்தில் இருந்ததும் அதற்கு ஒரு காரணம்.
மாத்தையா இந்தியா போகும்போதெல்லாம் வன்னிக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக பிரபாகரனிடம் முறையிட்டார். கிட்டுவும் இந்தியா போகும்போது பிரபாகரன் இதுபற்றி பேசியிருக்கிறார். ஆனால் யாழ்ப்பாண களம்தான் முக்கியமானதென்ற அபிப்பிராயம் பிரபாகரனிடமும் இருந்தது.
கிட்டுவின் நடவடிக்கைகளால் எரிச்சலடைந்த மாத்தையா வன்னிக்குள் ஒரு வரி நடைமுறையை கொண்டு வந்தார். யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் லொறிகள் கிளிநொச்சியில் வரி செலுத்த வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால், யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டுவரும் வர்த்தகர்கள் ஏற்கனவே யாழில் வரி கட்டிக்கொண்டிருந்தார்கள். இரண்டு இடத்தில் வரி கட்டவேண்டும் என்றதும், வர்த்தகர்கள் நிலைகுலைந்து விட்டார்கள். வர்த்தகர்கள் குழுவாகவும் தனிப்பட்டரீதியிலும் கிட்டுவை சந்தித்து முறையிட்டனர். அப்பொழுது வர்த்தகர்களிடம் கிட்டு சொன்ன பதில்- “வன்னி வரியை நான் கட்டுப்படுத்த முடியாது. நான் தலைவருடன் பேசுகிறேன். எதற்கும் நீங்களும் ஒரு கடிதம் மூலம் தலைவரிடம் முறையிடுங்கள். அந்த கடிதத்தின் பிரதியை என்னிடம் தாருங்கள். நானும் தலைவரிடம் அதை சேர்ப்பிக்கிறேன்“ என்பதே.
இந்த பிரச்சனை பிரபாகரன் வரை சென்றது. ஆனால் மாத்தையா கிளிநொச்சி வரியை நிறுத்திக்கொள்ளவேயில்லை.
கிட்டு மீது யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு தாக்குதல் நடந்தபோது, அது மாத்தையா அணியின் வேலையாக இருக்கலாமென்ற அபிப்பிராயம் புலிகளின் ஒரு சிறுபகுதியிடம் இருந்தது. மாத்தையா- கிட்டு மோதலை அறிந்து வைத்திருந்த மாற்று இயக்கங்கள், மாத்தையா குறூப்தான் கைக்குண்டை வீசியதாக கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்யாத குறையாக சொன்னார்கள். அவர்கள் இதை தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வந்ததால் மக்களில் ஒரு பகுதியினரும் அதை நம்பினார்கள்.
உண்மையில் கிட்டுவுக்கு கைக்குண்டு வீசியது மாத்தையா குழு அல்ல. புளொட்டில் இருந்து பிரிந்து தீப்பொறி என்ற குழு தனியாக செயற்பட்டது. அவர்கள்தான் இந்த தாக்குதலை செய்தனர். அந்த குழுவின் பத்து, பதினைந்து பேர்தான் இருந்தனர். இந்த தாக்குதலுடன் இரகசியமாக கொழும்பு சென்றுவிட்டனர். பின்னர் வெளிநாடுகளிற்கு சென்றுவிட்டனர். இந்த கைக்குண்டு தாக்குதலை நடத்தியவர்கள் இப்பொழுது கனடாவில் இருக்கிறார்கள். யுத்தம் முடியும் வரை இதற்கு அவர்கள் பொறுப்பேற்கவில்லை. புலிகளின் எதிர்வினை எப்படியிருக்குமென தெரியாதென்ற பயத்தில் சத்தமின்றி இருந்து விட்டார்கள். யுத்தம் முடிந்த பின்னர் இப்பொழுதுதான் யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கிறார்கள்.
புளொட்டில் நடந்த உள் படுகொலைகளை புதியதோர் உலகம் என்ற நாவலாக எழுதிய கோவிந்தனும் தீப்பொறி குழுவில்தான் இருந்தார். இப்பொழுது கனடாவில் உள்ள கந்தர்மடத்தை சேர்ந்த ஒருவரும் தீப்பொறி குழுவில் இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டில் 1990இல் யாழ்ப்பாணம் இருந்தாலும் இவர் வவுனியா, மன்னார் காடுகளிற்குள்ளால் கொழும்பிலிருந்து தமது அமைப்பு ஆட்களை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்து கொண்டிருந்தார். இப்படி ஒருமுறை வந்து கோவிந்தன், செல்வியுடன் (கவிஞர் செல்வி) தொடர்பேற்படுத்தி, மீள அமைப்பை யாழ்ப்பாணத்திற்குள் செயற்பட முயற்சித்த சமயத்திலேயே கோவிந்தனும், செல்வியும் புலிகளால் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் புலிகளின் சிறைச்சாலையில் கொல்லப்பட்டனர்.
தீப்பொறி குழுவின் தாக்குதலை மாத்தையாவின் தாக்குதலாக இன்றும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். 1993இல் புலிகளும் அப்படித்தான் நம்பினார்கள். மாத்தையா புலிகளிற்கு எதிராக சதி செய்தாரா என்பதற்கு அப்பால், கிட்டு மரணமானதும் புலிகளின் சந்தேகம் மாத்தையா மீது விழுந்தது. காரணம், பழைய கிட்டு- மாத்தையா மோதல்.
இரண்டு தளபதிகளிற்கிடையிலுமான மோதல் 1994இல் புலிகளிற்குள் பெரிய புயலை வீசச்செய்தது. சுமார் நானூறு வரையான போராளிகள் கொல்லப்பட்டனர். கிட்டுவும் இல்லை. மாத்தையாவும் இல்லை.
இதற்கு பின்னர் உக்கிரமாக தளபதிகளிற்குள் நடந்த உட்பகை, பொட்டம்மான்- கருணா விற்கிடையில் நடந்ததுதான். இதன் முடிவு என்னவென்பதை நாம் உங்களிற்கு சொல்ல வேண்டியதில்லை. தமிழர் தரப்பின் உள்ளக மோதல்கள்தான் நமது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.
சரி, விடயத்திற்கு வருகிறேன். பொட்டம்மானிற்கும் கருணாவிற்குமிடையிலான மோதல் எப்படி ஆரம்பித்தது?
(தொடரும்)
No comments:
Post a Comment